Last Updated : 28 Jul, 2021 08:33 PM

 

Published : 28 Jul 2021 08:33 PM
Last Updated : 28 Jul 2021 08:33 PM

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ: புகைமூட்டத்தால் குடியிருப்புவாசிகள் அவதி

திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 2-வது நாளாக இன்றும் தீ எரிந்து புகை மண்டலம் கிளம்பியதால் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் அவதியுற்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சி குப்பை கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை 150 ஏக்கரில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினமும் 110 டன் அளவுக்கு இங்கு கொண்டு சென்று கொட்டப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் காற்று வீச்சு அதிகமுள்ள காலங்களில் இந்த குப்பைக் கிடங்கில் தீப்பற்றி எரிவதும், அதனால் எழும் புகைமண்டலத்தால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த குப்பைக் கிடங்கில் நேற்று இரவில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. காற்று வேகமாக வீசுவதால் தீ மளமளவென பரவியது. அத்துடன் புகைமண்டலமும் கிளம்பியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் தலைமையில் பாளையங்கோட்டை, பேட்டை, கங்கைகொண்டான் தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இன்று 2-வது நாளாக தீ எரிந்தது. இதனால் எழுந்த புகைமூட்டத்தால் ராமையன்பட்டி,புதுக்காலனி, பாலாஜி நகர், சத்திரம் புதுக்குளம், சங்குமுத்தம்மாள்புரம், அன்னை வேளாங்கண்ணி நகர், சிவாஜி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகிறார்கள். ராமையன்பட்டி சங்கரன்கோவில் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு ஊர்ந்து செல்லவேண்டிய நிலை காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x