அரசுப் பேருந்து- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: இசைக் கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி

அரசுப் பேருந்து- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: இசைக் கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பேருந்து - கார் இரண்டும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தால் இசைக் கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புறவழிச் சாலையில் இன்று சென்னையில் இருந்து சேலம் நோக்கி வாடகைக் காரில் தனியார் இசைக் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஆஷிக் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக கார் மீது மோதியது.

இதில் வாடகை கார் ஓட்டுநர் முருகன் மற்றும் காரில் பயணம் செய்த இசைக் கல்லூரி மாணவர் ஆஷிக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகே இருந்த ஏரியில் புகுந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்துச் சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in