

ஆகஸ்ட் மாத இறுதியில் இராக்கிலிருந்து மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினர் வெளியேறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜோ பைடன் அமெரிக்க அதிபரான பிறகு, முதல் முறையாக ஓவல் அலுவலகத்தில் இராக் அதிபர் முஸ்தபா அல் காதிமியைத் திங்களன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பில், இராக்கில் அமெரிக்கப் போர் நடவடிக்கையை முறையாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பத்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அமெரிக்க ராணுவத்தினர் இராக்கிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர் சந்திப்பிலும் இதனை ஜோ பைடன் உறுதி செய்தார்.
2017ஆம் ஆண்டு இராக்கில் ஐஎஸ் ஆதிக்கத்தை அமெரிக்கப் படைகளுடன் இணைந்து இராக் அரசு கட்டுக்குள் கொண்டுவந்தது. போரில் ஐஎஸ் தோற்கடிக்கப்பட்டதாகவே இராக் அறிவித்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பாக்தாத் உள்ளிட்ட நகரங்களில் வன்முறை அதிகரித்து வருகிறது.
முன்னதாக, ஒபாமா காலத்திலிருந்தே பிற நாடுகளில் போர்ப் பணியில் ஈடுபடும் அமெரிக்க வீரர்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வரவழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறினர். தற்போது இராக்கிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.