வன்னியர் இட ஒதுக்கீட்டு அரசாணை: முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் நன்றி

வன்னியர் இட ஒதுக்கீட்டு அரசாணை: முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் நன்றி
Updated on
1 min read

வன்னியர் இட ஒதுக்கீட்டு அரசாணை பிறப்பித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் முன்னேற்றத்திற்காக மருத்துவர் ராமதாஸ் 42 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தின் பயன் இது. சமூகநீதிக் காவலரின் வழி நடப்பதில் பெருமிதம் கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இன்று வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், "அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.

அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in