Last Updated : 26 Jul, 2021 05:54 PM

 

Published : 26 Jul 2021 05:54 PM
Last Updated : 26 Jul 2021 05:54 PM

சிவகங்கையில் கொலையான மருத்துவ மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்த அவரது உறவினர்கள்.

சிவகங்கை

சிவகங்கையில் மருத்துவ மாணவர் கொலையில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்துநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இருதயராஜ் (60). இவரது மகன்கள் ஜோசப் (25), கிறிஸ்டோபர் (22). பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்த இவர்கள், கரோனா கட்டுப்பாடு காரணமாக வீட்டிலேயே ஆன்லைனில் படித்தனர்.

நேற்று அண்ணாமலைநகரில் தங்களது தோட்டத்தில் மது அருந்திய 7 பேர் கொண்ட கும்பலை இருதயராஜ், ஜோசப், கிறிஸ்டோபர் ஆகியோர் தட்டி கேட்டனர். ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் கத்தியால் மூவரையும் குத்தினர். இதில் கிறிஸ்டோபர் உயிரிழந்தார். இருதயராஜூவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த ஜோசப்பிற்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கொலை தொடர்பாக மருதுபாண்டி, நந்தகுமார் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் கிறிஸ்டோபர் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் ‘கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். ஜோசப்பிற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, கிறிஸ்டோபர் உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டிஎஸ்பி பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் சமரசப்படுத்தினர். இதையடுத்து உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர். இதற்கிடையில் சிவகங்கை நேருபஜாரைச் சேர்ந்த வசந்த் (23) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதுகுறித்து இருதயராஜ் கூறுகையில், ‘ எங்களுக்கும் சிலருக்கு இடம் தொடர்பான பிரச்சினை உள்ளது. இதனால் உண்மையான காரணத்தை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்,’ என்றார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘இருதயராஜ், ஜோசப், கிறிஸ்டோபர் ஆகிய மூவரும் தங்களது தோட்டத்தில் மது அருந்தியவர்களை தட்டி கேட்டுள்ளனர். இதில் இருத்தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மது அருந்தியவர்களையும், அந்த இடத்தையும் கிறிஸ்டோபர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இந்த ஆத்திரத்தில் தான் கொலை செய்துள்ளனர். வேறு காரணங்கள் இல்லை,’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x