Published : 24 Jul 2021 05:49 PM
Last Updated : 24 Jul 2021 05:49 PM

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 67,485 பேர் கரோனாவால் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,485 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில், “கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வைரஸே கரோனா தொற்றுக்குக் காரணமாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,485 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்தான் அதிகபட்சமாக 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி கூறுகையில், “அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகப் பதிவு செய்யப்படும் கரோனா தொற்றுகளில் 80%க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி காரணமாக அதிகமான நபர்கள் மருத்துவமனைகளில் வந்து அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது. அமெரிக்காவின் சில இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் தடுப்பூசி இலக்கு எட்டப்படாமல் இருப்பதற்கு சமூக ஊடகங்களே காரணம் என்று கடந்த வாரம் அமெரிக்க அரசு கூறியிருந்தது. இதற்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மறுப்பு தெரிவித்திருந்தன.

அமெரிக்காவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x