Last Updated : 18 Jul, 2021 06:48 PM

 

Published : 18 Jul 2021 06:48 PM
Last Updated : 18 Jul 2021 06:48 PM

பெண்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கி பிஹார் இளைஞர்களிடம் பண வசூல்: நடத்துநர் பணியிடை நீக்கம்

சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், பெண் பயணிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச் சீட்டுகளை, பிஹார் மாநில இளைஞர்கள் 21 பேருக்கு வழங்கி, முறைகேடாக கட்டணம் வசூலித்த நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தமிழகத்தில், அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில், தமிழக அரசின் உத்தரவுபடி, பெண்கள் அனைவரும் கட்டணமின்றி பயணிக்க சலுகை அளிக்கப்பட்டு, பேருந்து பயணத்தின்போது அவர்களுக்கு, கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலத்தில், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்தில், பயணச் சீட்டு ஆய்வாளர்கள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.

அதில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்களுக்கான கட்டணமில்லா பயணச் சீட்டுகளைப் பெற்று பயணித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பயணச் சீட்டு ஆய்வாளர்கள் நடத்திய விசாரணையில், சேலம் எருமாபாளையம் பணிமனைக்கு உட்பட்ட நடத்துநரான நவீன்குமார் (35), பீஹார் மாநில இளைஞர்களுக்கு தமிழ் மொழி தெரியாததைப் பயன்படுத்தி, அவர்களில் 21 பேருக்கு கட்டணமில்லா பயணச் சீட்டுகளை வழங்கி, அவர்களிடம் தலா ரூ.6 கட்டணம் வசூலித்திருப்பது தெரியவந்தது,

இதையடுத்து, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடத்துநர் நவீன்குமாரை பணியிடை நீக்கம் செய்தனர். இந்த சம்பவம் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x