Published : 16 Jul 2021 05:00 PM
Last Updated : 16 Jul 2021 05:00 PM

கரோனா தொற்று குறைந்ததும் இந்திய- இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தைப் பார்வையிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

ராமேசுவரம்

கரோனா தொற்று குறைந்ததும் இந்தியா- இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தமிழகக் கால்நடைத் துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்தை இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகக் கால்நடைத் துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறும்போது, ''பாம்பன் குந்துகால் துறைமுகத்தை 200 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தின் முதன்மை மீன்பிடித் துறைமுகமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முழுமையான நடவடிக்கை எடுக்கும்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட உள்ள புதிய மீன்பிடி மசோதாவால் தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நிச்சயம் தமிழக மீனவர் உரிமை காப்பதற்காகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை, கரோனா தொற்று குறைந்ததற்குப் பின்னர் விரைவில் நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ராமேசுவரத்தில் மீன்வளத்துறை டோக்கன் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மீனவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விசைப்படகு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

''ஏற்றுமதி மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் போக்க வேண்டும், ராமேசுவரத்தில் புதிய மீன்பிடி இறங்கு தளம் அமைத்துத் தர வேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x