இராக்கில் கரோனா வார்டில் தீ விபத்து: 52 பேர் பலி

இராக்கில் கரோனா வார்டில் தீ விபத்து: 52 பேர் பலி
Updated on
1 min read

இராக்கில் மருத்துவமனை ஒன்றில் கரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து இராக் ஊடகங்கள் தரப்பில், “இராக்கின் தென் பகுதியில் உள்ள அல் ஹுசன் மருத்துவமனையில் திங்கட்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 52 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர். வார்டில் இருந்த ஆக்சிஜன் டேங்குகள் வெடித்துச் சிதறியதே தீ விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே நோயாளிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.

இந்நிலையில் மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக ஆலோசிக்கத் தனது அமைச்சரவையை இராக் பிரதமர் முஸ்தபா கூட்டியுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் இராக் மருத்துவமனைகளில் ஏற்பட்ட மூன்றாவது தீ விபத்து இதுவாகும்.

இராக்கில் இதுவரை 14,38,511 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 17,592 பேர் பலியாகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in