Last Updated : 12 Jul, 2021 06:27 PM

 

Published : 12 Jul 2021 06:27 PM
Last Updated : 12 Jul 2021 06:27 PM

விவசாயிகள் பெயரில் ரூ.48 கோடி கடன்; திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

விவசாயிகள் பெயரில் ரூ.48 கோடி வங்கியில் கடன் வாங்கிய திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திரு ஆரூரான் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுவை அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகியைக் கைது செய்ய வேண்டும், ஆலை சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது விவசாயிகள் கொடுத்த மனுவில், ''பாபநாசம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு 2016-2017, 2017-2018ஆம் ஆண்டு வெட்டிய கரும்புக்கு விவசாயிகளுக்கு இதுவரை 80 கோடி ரூபாய் வழங்கப்படாமல் உள்ளது.

அதேபோல் கரும்பு விவசாயிகளின் பெயரில் உள்ள நிலங்களுக்குரிய கிராம நிர்வாக அலுவலரின் சான்றை மட்டும் வைத்து 218 விவசாயிகளின் பெயரில் கும்பகோணம் கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.48 கோடி கடன் வாங்கிய ஆலை நிர்வாகி கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், வங்கி சார்பில் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்குவதால், ஆலை நிர்வாகியைக் கைது செய்து, வங்கிக் கடன் தொகையை மீட்க வேண்டும்.

இதனால் விவசாயிகள் வங்கிக் கடன் பெற முடியாமல் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, திருமண்டங்குடி, கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்குரிய இடத்தை அரசே கைப்பற்றி விவசாயிகளுக்குத் தரவேண்டிய தொகையைத் தர வேண்டும். வங்கிக் கடன்களையும் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x