Last Updated : 12 Jul, 2021 04:45 PM

 

Published : 12 Jul 2021 04:45 PM
Last Updated : 12 Jul 2021 04:45 PM

பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை: குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்

பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது உடலில் குளுக்கோஸ் ஏற்றுவது போல் மருத்துவ உபகரணங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு, கோரிக்கைகளை விளக்கி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சுகுமாரன் கூறுகையில், ''கடந்த 2020- 2021ஆம் ஆண்டுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையாக விவசாயிகள் ரூ.19 ஆயிரம் கோடி செலுத்தி இருந்தனர். ஆனால் வரலாறு காணாத மழையினால் விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இதனால் தெம்பு இல்லாமல் உள்ள விவசாயிகளுக்கு, தாங்களாகவே குளுக்கோஸ் ஏற்றிக் கொள்ளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அதே போல் காவிரின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். இதனை மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி, கோரிக்கை மனுவினை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x