டிஜிபி சைலேந்திரபாபு: பொதுமக்கள் - காவல்துறை நல்லுறவை மேம்படுத்தியவர்

டிஜிபி சைலேந்திரபாபு: பொதுமக்கள் - காவல்துறை நல்லுறவை மேம்படுத்தியவர்
Updated on
1 min read

தமிழக காவல்துறையின், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சி.சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

டிஜிபி சி.சைலேந்திரபாபு, கடந்த 2010-ம் ஆண்டு கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது.

முதல்வர், குடியரசுத் தலைவர், நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்கள், பல நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உரிய முறையில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, எவ்வித பாதுகாப்பு குளறுபடிகளும் இல்லாமல், இந்த மாநாடு சிறப்பாக நடந்து முடிய அவர் உறுதுணையாக இருந்தார்.

மேலும், இவரது பணிக்காலத்தின் போது, கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம், 11 வயதுடைய சிறுமி, 8 வயதுடைய சிறுவன் ஆகியோர் அவர்களது டாக்ஸி ஓட்டுநரான பொள்ளாச்சியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரால் கடத்தப்பட்டனர். இத்தகவல் கிடைத்தவுடன் அவர்களை மீட்க உடனடியாக களத்தில் இறங்கினார் காவல் ஆணையர் சைலேந்திரபாபு.

ஆனால், காவல்துறை நெருங்குவதை அறிந்து, எதிர்பாராதவிதமாக கால் டாக்ஸி ஓட்டுநர் மோகனகிருஷ்ணன் கடத்தப்பட்ட சிறுவன், சிறுமியை கொடூரமாக கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக, டாக்ஸி ஓட்டுநரான மோகனகிருஷ்ணன், அதேப் பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ஒரு என்கவுன்ட்டவர் நடந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர், தண்டனை குறைப்பு செய்யப்பட்டு, அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடம் நட்புறவு:

மேலும், கோவை மாநகர காவல் ஆணையராக சைலேந்திரபாபு பணியாற்றிய காலகட்டங்களில், காவல்துறையினர் - பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தவும், வீட்டில் தனிமையில் உள்ள முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தீர்க்கமாக மேற்கொண்டார்.

கோவை மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து வடக்கு மண்டல ஐஜியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கோவையிலேயே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த சமயத்தில் மக்கள், கோவையின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in