Published : 24 Jun 2021 12:54 PM
Last Updated : 24 Jun 2021 12:54 PM

ஆளுநர் உரை ட்ரெய்லர்தான்; முழுதாக பட்ஜெட்டில் காணலாம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

ஆளுநர் உரை ட்ரெய்லர்தான் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை ஜூன் 21 அன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த விவாதங்களில், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (ஜூன் 24), ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

"கடந்த 2 தினங்களாக திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார்கள். அந்தப் பிரச்சினைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குறித்து வைத்துள்ளனர். துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆட்சி குறித்து ஆளுநர் உரையில் மட்டும் முழுமையாகச் சொல்ல முடியாது. ஆளுநர் உரை என்பது அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில், அரசின் 5 ஆண்டுகளுக்கான நோக்கம், திட்டம், செயல்பாடுகள், அணுகுமுறைகளை விளக்கிவிட முடியாது.

ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான். புரியக்கூடிய வகையில் சொல்லப்போனால், இது ஒரு ட்ரெய்லர்தான். முழுத் திரைப்படத்தை வெள்ளித்திரையில் காணலாம் என்பதுபோல, அரசின் பாதை, இடர்ப்பாடுகள், அவற்றைக் களைந்தெறியும் சூட்சுமம் ஆகியவை விரையில் இந்த அவையில் வைக்கப்படவுள்ள பட்ஜெட்டில் இடம்பெறும்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x