சசிகலா குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சர் உருவபொம்மை எரிப்பு 

நத்தம் பேருந்துநிலையம் அருகே முன்னாள் அமைச்சர் உருவபொம்மையை எரித்த அமமுகவினர்.
நத்தம் பேருந்துநிலையம் அருகே முன்னாள் அமைச்சர் உருவபொம்மையை எரித்த அமமுகவினர்.
Updated on
1 min read

சசிகலா குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனை கண்டித்து, இன்று நத்தத்தில் அவரது உருவ பொம்மையை அமமுகவினர் எரித்தனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது, ‘சசிகலா தாய் அல்ல, அவர் ஒரு பேய்’ என முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் பேட்டியளித்தார்.

இதையடுத்து சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக கூறி நேற்று நத்தம் பேருந்துநிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக திண்டுக்கல் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராஜா, நகர செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனின் உருவபொம்மையை எரித்தனர்.

அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

நத்தம் போலீஸார் உருவபொம்மையை தீபற்றி எரிவதை அணைத்தனர். அமமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி இணைசெயலாளர் தினேஷ், நகர துணைசெயலாளர் மாரிமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in