சாத்தூர் அருகே மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

Published on

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் இன்று மாலை உயிரிழந்தனர்.

சாத்தூர் அருகே உள்ள நல்லி கிராமத்தை சேர்ந்தவர் சோலைராஜ். இவரது மனைவி சண்முகசுந்தரவள்ளி (52) மற்றும் சோலயப்பன் மகன் கருப்பசாமி (16) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் மனைவி தங்கமாரியம்மாள் (45) உள்ளிட்ட சிலர் இன்று மாலை அங்குள்ள துர்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்றனர்.

அங்கு பலத்த மழை பெய்ததால், கோயிலின் வெளிப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் சண்முகசுந்தரவள்ளி, கருப்பசாமி, தங்கமாரியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்த இருவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து சாத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in