Published : 08 Jun 2021 07:53 PM
Last Updated : 08 Jun 2021 07:53 PM

மாத ஊதியத்தின் ஒரு பகுதியில் ஊரடங்கில் சேவை: சாலையோரவாசிகளுக்கு உணவு சமைத்து வழங்கும் மதுரை இளைஞர்கள்

மதுரை

யாரிடமும் நன்கொடை வசூலிக்காமல் மாத ஊதியத்தில் இருந்து ஒரு சிறு தொகையை சேமித்து சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு சமைத்து விநியோகம் செய்கின்றனர் மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.

மதுரை நரிமேட்டைச் சேரந்தவர் பி.செல்வம். இவர் ப்ளஸ்-டூ முடித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து இந்த கரோனா ஊரடங்கில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் தினமும் மதிய உணவு சமைத்து எடுத்துச் சென்று வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து பி.செல்வம் கூறுகையில், ‘‘ஆரம்பத்தில் 3 நாட்கள் மட்டுமே செய்வோம் என்று ஆளுக்கு தலா ரூ.1000 எடுத்து உணவு பொட்டல்கள் வழங்கினோம். பலரும் எங்களைப் பாராட்டியதால் இந்த சேவையை ஊரடங்கு முடியும் வரை செய்தால் என்னவென்று யோசித்தோம்.

அதன் அடிப்படையிலே தினமும் சமைத்து மதிய வேளைகளில் சாலைகளில் வசிப்போருக்கு வழங்குகிறோம். நிறைய பேர் நடக்க முடியாதவர்களாக உள்ளனர்.

அவர்களால் சாப்பாடு கேட்டு கூட எங்கும் செல்ல முடியாது. அவர்களைத் தேடிச் சென்று வழங்குகிறோம். வெஜிடபிள் பிரியாணி, ஒரு முட்டை, தண்ணீர் பாட்டில் வழங்குகிறோம்.

தற்போது இந்த சேவையில் எனது நண்பர்கள் மட்டுமல்லாது அவர்களுடைய நண்பர்கள் என்று பலர் இணைந்துள்ளனர்.

வெற்றிகரமாக 21 நாட்கள் சாப்பாடு வழங்கியிருக்கிறோம். நாமும் ஏதோ சமூகத்திற்கு முடிந்தளவு உதவியுள்ளோம் என்ற மனதிருப்தி ஏற்பட்டுள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x