

கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட கோபனாரி மேற்குப் பகுதியில் வனத்துறையினர், காவல்துறையின் எஸ்டிஎஃப் பிரிவினர் இணைந்து கடந்த 6-ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, குண்டுக்கல் சரக வனப்பகுதியின் ஓடைக்குள் இரண்டு பேர் இருப்பதைக் கண்டு அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில், இருவரும் கேரள மாநிலம், அட்டபாடி அருகே உள்ள கோட்டத்துறையைச் சேர்ந்த ரங்ககாமி (68), மணிகண்டன் (19) என்பதும், காட்டுப்பன்றிக் கறியை ஓடையில் சுத்தப்படுத்திக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
ஓடையின் மேட்டுப் பகுதியில், கறியை வெட்டிக் கொண்டிருந்த 4 பேர் கறி, வெட்டுக்கத்தியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து சுமார் 30 கிலோ இறைச்சி கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் மதுசூதனன் மற்றும் குழுவினர் தப்பியோடியவர்களைத் தேடி வந்தனர்.
அதில், தப்பியோடிய கோவை பன்னிமடையைச் சேர்ந்த செந்தில்குமார் (36), கோட்டத்துறையைச் சேர்ந்த செல்வம் (38), சக்திவேல் (21), வேலுச்சாமி (44) ஆகிய நால்வரும் நேற்று (ஜூன் 07) கேரளப் பகுதியில் தனித்தனியே பிடிபட்டனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கேரள மாநில எல்லையோரம் குடியிருப்பதால் தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்து, இரும்புக் கம்பிகளில் சுருக்கு வைத்து, காட்டுப்பன்றியை வேட்டையாடி வெட்டிக் கூறு போட்டதும், தங்களது தேவை போக மீதியை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், கோவை, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி 6 பேருக்குத் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.