

கடன் தவணைக்காக நெருக்குதல் கொடுத்தால் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை ஆட்சியர் எச்சரித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பெருந்தொற்று தமிழகத்தில் அதிகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வரும் 14-ம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவசரத் தேவைகளுக்காக பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் மாதாந்திர தவணை தொகை மற்றும் அதற்குரிய வட்டி தொகையினை உடனடியாக திரும்ப செலுத்த கோரி சம்பந்தப்பட்ட நிதி நிறுவன பிரதிநிதிகள் வற்புறுத்தி வருவதுடன் மகளிரை பல்வேறு வழிகளில் மிரட்டி வருவதாகவும் அதிகமான புகார்கள் வரப்பெற்றுள்ளன.
முழு ஊரடங்கு அமலில் உள்ள இந்நெருக்கடியான கால ட்டத்தில் மக்களின் வாழ்வாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணைத் தொகையினை பெறுவதில் கடின போக்கினை தவிர்த்திட வேண்டும்.
இது தொடர்பான புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.