

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் யாதவர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு யாதவர் சங்கத் தலைவர் எம்.சுந்தரராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் யாதவர்கள். இவர்களக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
1996-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30 சதவீத இடஒதுக்கீடு 26.50 சதவீதமாக குறைக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கு 3.5. சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுவரை யாதவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் யாதவர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
சமீபத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5. சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் யாதவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் தான் முடிவெடுக்க முடியும். நீதிமன்றம் நிவாரணம் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.