

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றநடவடிக்கைகளை தடுக்கும்விதமாக போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட 17 இருச்சக்கர வாகனங்களை இன்று திண்டுக்கல் எஸ்.பி., ரவளிபிரியா போலீஸாருக்கு வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல்நிலையப் பகுதிகளில் 63 இருசக்கரவாகன ரோந்துப் பிரிவு நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றநடவடிக்கைளை மேலும் தடுக்கவும், குற்றங்கள் மீதான நடவடிக்கையை விரைந்து எடுக்கவும் ஏதுவாக அரசால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக 17 இருசக்கரவாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதை இன்று போலீஸாருக்கு வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு இருசக்கவாகனத்திற்கான சாவியை வழங்கி கொடியசைத்து ரோந்து பணியை தொடங்கிவைத்தார்.
இதில் ரெட்டியார்சத்திரம், பட்டிவீரன்பட்டி, சத்திரப்பட்டி, நத்தம், வத்தலகுண்டு, வடமதுரை, விளாம்பட்டி, நிலக்கோட்டை, செம்பட்டி, திண்டுக்கல் நகர் தெற்கு, சின்னாளபட்டி ஆகிய காவல்நிலையங்களுக்கு தலா ஒரு இருச்சக்கர வாகனமும், குஜிலியம்பாறை, பழநி ஆகிய காவல்நிலையங்கள் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தலா இரண்டு இருச்சக்கரவாகனங்கள் என மொத்தம் 17 இருசக்கரவாகனங்கள் வழங்கப்பட்டது.