

கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் சுற்றித் திரியும் 400க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கால்நடை பாதுகாப்பு பராமரிப்பு சங்கம் சார்பில் தினமும் ஒரு வேளை உணவு வழங்கப்பட்டுவருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் சுமார் 400 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இந்த நாய்களுக்கு உணவு என்பது ஓட்டல் கழிவுகள் மற்றும் சுற்றுலாபயணிகள் விட்டுச்செல்லும் உணவு பொருட்கள்தான்.
முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் வருகை முற்றிலும் இல்லை. ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தெருநாய்கள் உணவுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றிற்கு உணவு வழங்க முடிவு செய்த கால்நடை பாதுகாப்பு பராமரிப்பு சங்கத்தினர் வீட்டிலேயே உணவு தயாரித்து தெரு நாய்களுக்கு வழங்கிவருகின்றனர்.
தினமும் ஒருவேளை உணவு நகரின் பல பகுதிகளில் தெருநாய்களை தேடிச்சென்று வழங்குகின்றனர்.
வழக்கமான உணவுடன் சத்துக்கள் நிறைந்த (பெடிகிரி) உணவையும் சேர்த்து பொட்டலங்களை பிரித்து உணவை வைக்கின்றனர்.
தினமும் உணவுகள் வழங்க வாகனத்தில் வருபவர்களை எதிர்பார்த்து இந்த நாய்கள் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்த்து காத்துள்ளன. அவர்களை அடையாளம் கண்டு தெருநாய்கள் உணவைபெற உற்சாகமாய் முன்வருகின்றன.
மேலும் தெருநாய்களுக்கு நோய் தொற்று ஏதும் ஏற்பட்டுள்ளதா என்றும் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றனர்.