Published : 08 May 2021 04:07 PM
Last Updated : 08 May 2021 04:07 PM

கரூர் மாவட்டத்தில் 90 நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம்

கரூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்தில் மகளிர் பயணம் செய்யக் கட்டணமில்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் இயக்கப்படும் 90 நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாகப் பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளித்திருந்தது.

நேற்று (மே 7-ம் தேதி) முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ரேஷன் அட்டைக்கு ரூ.4,000, பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் உள்ளிட்ட 5 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதில் பெண்கள் அரசு நகரப்பேருந்துகளில் இன்று (மே 8ம் தேதி) முதல் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட கரூர் மாவட்டத்தில் கரூர் 1, கரூர் 2, அரவக்குறிச்சி, குளித்தலை என 4 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இவற்றில் 4 பணிமனைகளில் 90 நகரப் பேருந்துகள் உள்ளன.

தமிழக அரசு போக்குவரத்துக்கழக நகரப் பேருந்துகளில் பெண்கள் இன்று (மே 8ம் தேதி) முதல் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம் என அரசு உத்தரவிட்டதை அடுத்து கரூர் மாவட்டத்தில் 4 பணிமனைகளில் உள்ள 90 நகரப் பேருந்துகளின் முகப்புக் கண்ணாடியில் மகளிர் பயணம் செய்யக் கட்டணமில்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டது.

மாவட்டத்தில் இன்று (மே 8ம் தேதி) காலை முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மகளிரும் கட்டணமின்றி இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல கரூர் அரசு மருத்துவக் கல்லூரி வழியாக புலியூர் சென்று திரும்பும் இரு சிற்றுந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x