Published : 07 May 2021 02:55 PM
Last Updated : 07 May 2021 02:55 PM

கரூர் அருகே விபத்துக்குள்ளான மினி வேன்; கார், பைக் மீது லாரி மோதல் - 2 பேர் உயிரிழப்பு

விபத்து நிகழ்ந்த இடம்.

கரூர்

கரூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

கரூர் மாவட்டம் நெடுங்கூரை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவர், நூல் ஏற்றுவதற்காக மினி வேனில் கரூர் நோக்கி, இன்று (மே 07) சென்றுள்ளார். பவித்திரம் அருகே, வானவிழி பேருந்து நிறுத்தம் அருகே செல்லும்போது, முன்னால் சென்ற கார் மற்றும் இருசக்கர வாகனத்தை முந்த முயன்றுள்ளார்.

அப்போது, கரூரில் இருந்து க.பரமத்தி சென்ற லாரி, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளது. இதில், மினி வேன் மீது லாரி மோதி இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதியுள்ளது. இதில், மினி வேன் ஓட்டுநர் செந்தில்குமார், இருசக்கர வாகனத்தில் சென்ற ராமநாதன் (55) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

கார் ஓட்டுநர் சீனிவாசன் (40), காரில் பயணம் செய்த தினேஷ் (32), பிருந்தா (30), மினி வேனில் பயணம் செய்த ராஜேந்திரன், லாரி ஓட்டுநர் துரைசாமி (45) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அனைவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், மினி வேன் ஓட்டுநர் செந்தில்குமார், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ராமநாதன் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x