கரோனா பாதிப்பால் சிதம்பரம் தலைமைக் காவலர் மரணம்

கரோனா பாதிப்பால் சிதம்பரம் தலைமைக் காவலர் மரணம்
Updated on
1 min read

சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜ்குமார், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மரணமடைந்தார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கரோனா உயிரிழப்புகளும் தீராத சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்திலும் கோவிட்-19 தொற்றால் அதிக அளவிலான மக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் அதிக அறிகுறி உள்ளவர்களுக்கு, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.

இதற்கிடையே சிதம்பரம் நகரக் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜ்குமார் என்பவர் அண்மையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று ராஜ்குமார் உயிரிழந்தார். அவர் இதற்கு முன்பு புத்தூர், காட்டுமன்னார் கோவில் ஆகிய ஊர்களில் வட்ட எழுத்தராகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in