சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (16-ம் தேதி) திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலம் மாநகராட்சியில் பணியாற்றி வருகிறார். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பங்களாவில் பார்த்திபன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான போலீஸார் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், ''மதுரை மாநகராட்சியில் நகர் நல அலுவலராக பார்த்திபன் பணியாற்றிய போது, அங்கு 2017- 2018ஆம் ஆண்டுகளில் மருந்துகள் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர் நடவடிக்கையாக, சேலத்தில் நகர் நல அலுவலர் பார்த்திபன் வீட்டில் சோதனை நடந்து வருகிறது'' என்று தெரிவித்தனர்.

சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடத்தி வரும் சோதனையில், முறைகேடு சம்பந்தமான ஆவணங்கள், ரசீதுகள் உள்ளனவா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in