

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்கால் தொகுதியில் ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டே வாக்குச் சேகரித்ததால் மக்கள் உற்சாகமடைந்தனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆர்.கமலக்கண்ணன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
திருநள்ளாறு, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆர்.கமலக்கண்ணன் வாக்குச் சேகரித்தார். அவருடன் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பொறுப்பாளருமான சஞ்சய் தத்தும் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குகளைக் கோரினர். கமலக்கண்ணன் இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். முன்னாள் அமைச்சர் வண்டி ஓட்டிக்கொண்டே வாக்குச் சேகரித்த நிகழ்வு தொகுதி வாக்காளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.