சுரங்கம் தோண்டியபோது மயங்கிய இருவர் நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்

சுரங்கம் தோண்டியபோது மயங்கிய இருவர் நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே புதையல் எடுப்பதாகக் குழி தோண்டி சுரங்கப் பாதை அமைத்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய இருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிவிட்டனர்.

நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் முத்தையா (65). தனியார் நிறுவன காவலாளியான இவரது மகன்கள் சிவமாலை (40), சிவவேலன் (43) ஆகியோர் அவரது வீட்டின் பின்புறம் புதையல் இருப்பதாக கூறி 40 அடி ஆழத்தில் குழி தோண்டி 7 அடியில் சுரங்கபாதையும் அமைத்துள்ளனர்.

கடந்த 28-ம் தேதி பண்ணம்பாறையை சேர்ந்த மணிகண்டன் மகன் நிர்மல் கணபதி (17), நாசரேத் கோடதநகர் கந்தவேல் மகன் லட்சுமண பெருமாள் என்ற ரகுபதி (47) ஆகியோர் சுரங்க அமைத்த பகுதியில் வேலை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சிவமாலை, சிவவேலன், நிர்மல் கணபதி, ரகுபதி ஆகிய 4 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புப் படையினர் மயங்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.

அப்போது ரகுபதி மற்றும் நிர்மல் கணபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனது தெரியவந்தது. சிவவேலன் மற்றும் சிவமாலை ஆகிய இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து நாசரேத் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி அனுமதியின்றி சுரங்கம் அமைத்ததாக சிவவேலன், சிவமாலை, சிவவேலனின் மனைவி ரூபா (40) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்துள்ளார்.

இந்நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவமாலை மற்றும் சிவபாலன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களை மருத்துவமனை போலீஸார் தேடி வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in