

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 41 வழக்குகள் பதியப்பட்டன. மேலும் 90 புகார்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்களும் நடந்து வருகின்றன.
கட்சி வேறுபாடின்றி தேர்தல் விதிமீறல் ஆதாரங்களை திரட்டி வழக்கு பதிய சிவகங்கை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும்படைகள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 4 வீடியோ மதிப்பீட்டு குழுக்கள், ஒரு வீடியோ பார்வையிடும் குழு அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை மற்றும் இணையதளத்திற்கு வந்த புகார்கள் குறித்தும் உடனுக்குடன் விசாரிக்கப்படுகின்றன.
மார்ச் 23-ம் தேதி வரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 45 புகார்கள், இணையதளத்தில் வந்த 45 புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன, என்று கூறினார்.