

பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசாமி -வள்ளி,தெய்வானை சமேதர் மற்றும் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் விழாவின் ஏழாம் நாளான 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
31ம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வந்து பழனிஆண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம், கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாள் ஒன்றுக்கு 25ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், ஆன்லைனில் பதிவு செய்யாத பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பழனி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் குமரதுரை(பொறுப்பு), அறங்காவலர்குழு உறுப்பினர்கள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.