Published : 13 Mar 2021 09:06 PM
Last Updated : 13 Mar 2021 09:06 PM

கோடையில் குளுமை; குற்றாலம் அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்

தென்காசி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சாரல் மழை பெய்யும்.

இதனால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்த கொட்டும். மலையில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டம், அடிக்கடி பெய்யும் சாரல் மழை, குளுமையான தென்றல் காற்று, பேரிறைச்சலுடன் கொட்டும் அருவி நீர் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, குற்றாலம் அருவிளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. மார்ச் மாதம் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் வரை நீடித்தது.

டிசம்பர் 15 முதல் கட்டுப்பாடுகளுடன் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், சுமார் 9 மாதங்களாக களையிழந்து காணப்பட்ட குற்றாலம் மீண்டும் களைகட்டத் தொடங்கியது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்ததால் அருவிகளில் நீர் வரத்து வெகுவாகக் குறைந்தது. சமீபத்தில் பெய்த கோடை மழையால் அருவிகளில் மீண்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கோடைக் காலத்தில் குளுமையான அருவிக் குளியலை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

விடுமுறை தினம் என்பதால் இன்று குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது வானில் மேகமூட்டம் காணப்பட்டது. வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x