Published : 06 Mar 2021 08:06 PM
Last Updated : 06 Mar 2021 08:06 PM

அமமுக வேட்பாளர் பட்டியலில் உள்ளூர் நிர்வாகிகளுக்கே முக்கியத்துவம்?

மதுரை

அமமுக வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் வரும் 10ம் தேதி வெளியிட உள்ளதாகவும், வேட்பாளர் பட்டியலில் அந்தந்தத் தொகுதியைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகளுக்கே முக்கியத்துவம் அளிக்க உள்ளதாகவும் அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சையாகப் போட்டியிட்டு அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளையே பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார் டிடிவி தினகரன்.

அவரின் அந்த வெற்றி, அவர் தொடங்கிய அமமுக மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும், பெரும்பாலான தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குவங்கியைப் பெற்றது.

சசிகலா சிறையில் இருந்து திரும்பிய நிலையில் அவரது ஆதரவு, பிரச்சாரத்தால் இந்தத் தேர்தலில் குறிப்படத்தக்க தொகுதிகளில் வெற்றி திட்டமிட்டிருந்தார்.

ஆனால், சசிகலா திடீரென்று அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்ததால் டிடிவி தினகரன் உள்பட அமமுக தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் ஒரு புறம் நடக்கும் நிலையில் மற்றொரு புறம் 234 தொகுதிகளிலும் அமமுக களம் இறங்குவதற்கான தேர்தல் பணிகளை அக்கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.

அமமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் மார்ச் 8, 9 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தலில் சீட் ஒதுக்குவது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அமமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘அமமுகவில் போட்டியிட தினமும், 750 முதல் 1,500 பேர் கட்சித் தலைமையில் விருப்பமனு வழங்கி வருகின்றனர். வேட்பாளர் பட்டியலில் அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. 8, 9ம் தேதி நேர்காணல் நடக்கிறது. 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x