Published : 23 Feb 2021 01:06 PM
Last Updated : 23 Feb 2021 01:06 PM

கரோனா சிகிச்சை பெறுவோர் 0.48%க்குக் கீழே உள்ளனர்: சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 0.48 சதவீதத்துக்கும் கீழே உள்ளது என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''தமிழகத்தில் 4 ஆயிரம் பேர்தான் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 0.48 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. இது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளதாகப் பலர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகக் கரோனா தொற்று தினந்தோறும் 450க்கும் குறைவாகவே உறுதியாகி வருகிறது. ஆனாலும், இது எங்களுக்கு அச்சம் தரக்கூடியதாகவே உள்ளதாகக் கருதுகிறோம்.

சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்படுவதைக் காண முடிகிறது. ஹைதராபாத்தில் உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதை நினைவில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை நிறுத்திவிட்டனர். இந்த வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும்'' என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x