Last Updated : 19 Feb, 2021 08:42 PM

 

Published : 19 Feb 2021 08:42 PM
Last Updated : 19 Feb 2021 08:42 PM

எட்டயபுரம் அருகே மணல் குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மாணவர் உட்பட இருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பேரிலோவன்பட்டி வைப்பாற்றில் மணல் குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

எட்டயபுரம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டி கிராமத்தை சேர்ந்த பெத்து ஓவல்ராஜ் மகன் சென்றாயபெருமாள் (15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ராமராஜ் (37) என்பவரும் இன்று காலை தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க சென்றனர்.

அப்போது, அங்குள்ள வைப்பாற்றில் ஆடுகளை குளிப்பாட்டியுள்ளனர். இதில், அங்கிருந்த மணல் குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் சென்றாயபெருமாள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.

தத்தளித்த அவரை மீட்க ராமராஜிம் தண்ணீரில் இறங்கியுள்ளார். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கினர்.

ராமராஜின் தந்தை குமார் அங்கு சென்றபோது, ஆடுகள் மட்டும் நின்றிருந்தன. ராமராஜின் காலணி ஆற்றங்கரையில் கிடந்தன. இதை பார்த்து சந்தேகமடைந்த அவர், உடனடியாக ஊரில் உள்ள மக்கள் உதவியுடன் ஆற்று பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் தேட தொடங்கினர்.

தகவல் அறிந்து விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் சென்றாயபெருமாள், ராமராஜ் ஆகியோர் உடல்கள் மீட்கப்பட்டன. இது குறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x