Last Updated : 19 Feb, 2021 12:26 PM

 

Published : 19 Feb 2021 12:26 PM
Last Updated : 19 Feb 2021 12:26 PM

படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 5 பேரை மீட்ட இந்திய கடலோரக் காவல் படையினர்

இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்டு அழைத்து வரப்பட்ட மீனவர்கள்.

காரைக்கால்

படகு பழுதான நிலையில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டு இன்று காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

அந்தமான் மற்றும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர், மீன்பிடிப் படகைப் பழுது நீக்கம் செய்வதற்காக, அந்தமானிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது படகு பழுதாகி நின்றுள்ளது.

காரைக்காலுக்கு கிழக்கே 205 கடல் மைல் தொலைவில் படகு ஒன்று நிற்பது குறித்து கடந்த 16-ம் தேதி, இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மையத்துக்கு சிக்னல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு விமானம் மூலம் பார்வையிட்ட பின்னர், அந்தமான் பதிவு எண்ணுடன் படகு நிற்பதை உறுதிப்படுத்திய இந்திய கடலோரக் காவல்படையினர், அருகாமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான அன்னிபெசன்ட் ரோந்து கப்பலுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு சென்ற கடலோரக் காவல்படையினர், படகு பழுதாகி, கடல் நீர் உட்புகும் நிலையில் இருந்ததைக் கண்டுள்ளனர். உடனடியாக, மீட்புப் பணிகளை மேற்கொண்டு, மீனவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கியுள்ளனர். தொடர்ந்து மீனவர்களுடன் படகை மீட்டு இன்று (பிப்.19) காலை காரைக்கால் கப்பல் துறைமுகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

நடுக்கடலில் தத்தளித்த தங்களை உரிய நேரத்தில் மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்த இந்திய கடலோரக் காவல் படையினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x