Published : 18 Feb 2021 07:16 PM
Last Updated : 18 Feb 2021 07:16 PM

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின்?- அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் வழங்கப்படும் செய்தி உண்மையா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் 162-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டுத் தமிழக அரசின் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிங்கார வேலரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவர் வளர்மதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் வழங்கப்படுவதாக வெளியான தகவல் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ''இணையத்தில் வெளியான தகவல் குறித்துக் கேட்கிறீர்கள். சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் அனைத்துமே உண்மை அல்ல. தேர்தல் வாக்குறுதிகளைப் பொறுத்தவரை அதிகாரபூர்வமாக வெளியாகும் தகவல்கள் மட்டுமே உண்மை. புரளிகளைக் கிளப்பி ட்ரெண்ட் செய்வதற்கென்றே சில குழுக்கள் உள்ளன. அதில் உண்மை இல்லை.

தேர்தல் வாக்குறுதி அறிக்கையைத் தயார் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை விரைவில் கட்சி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் வெளியிடுவார்கள். அப்போது உண்மை தெரியும்.

தொலைநோக்குப் பார்வையில் அனைவருக்கும் பயன்படும் வகையில் லேட்பாப்பைக் கொடுத்தவர் ஜெயலலிதா. பொதுமுடக்கக் காலத்தில் அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x