

நிதி நிறுவன மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் ஆரம்பித்து ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவரின் புகாரின் பேரில் பலர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் என் பெயரும் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து என்னை போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தேன். இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனவே வழக்கிலிருந்து என் பெயரை நீக்க வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஹேமலதா விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.