

நியூசிலாந்தில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பு மருந்து போடப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, “நியூசிலாந்தில் கரோனா தடுப்பு மருந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளது. பைசர் கரோனா தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கரோனாவைத் தடுக்க மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது. இந்த நிலையில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதற்குப் பிறகு அங்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் நியூசிலாந்தில் கட்டுப்படுத்தப்பட்டது.