Published : 11 Feb 2021 01:51 PM
Last Updated : 11 Feb 2021 01:51 PM

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுக: அமைச்சர் உதயகுமார் பேச்சு

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுகதான் என்றும் அதுவே விசாரணை ஆணையத்தின் தீர்ப்பாக இருக்கும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ''ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுகதான்.

100 ஆண்டுகள் வாழக்கூடிய ஜெயலலிதா மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆயிரம் ஆயிரம் பொய் வழக்குகளைப் போட்டது திமுக. அப்படிச் செய்து எங்கள் தாயை நீங்கள் அற்ப ஆயுளில் கொன்றுவிட்டீர்கள். இன்று விசாரணை கமிஷன் என்று புத்தரைப் போல வேடம் போடுவதை அதிமுக தொண்டன் மட்டுமல்ல, ஒரு தமிழன் கூட ஏற்றுக்கொள்ள மாட்டான்.

நீங்கள் வழக்குப் போடாமல் இருந்தால் ஜெயலலிதா இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுகதான். அதுவே விசாரணை ஆணையத்தின் தீர்ப்பாக இருக்கும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முகராசி முதல்வர் மட்டுமல்ல மழை ராசி முதல்வர். சமூக வலைதளங்களில் எதிர்க் கட்சிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யும் பொய்ப் பிரச்சாரங்கள் அனைத்தையும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்கும்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x