Published : 09 Feb 2021 03:56 PM
Last Updated : 09 Feb 2021 03:56 PM

சாலையைச் சீரமைக்காததைக் கண்டித்து கோவில்பட்டியில் நூதனப் போராட்டம்

கோவில்பட்டியில் சாலையை விரிவுபடுத்திச் சீரமைக்காத அதிகாரிகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கழுதைகளிடம் மனு வழங்கும் போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள மங்கள விநாயகர் கோயில் முதல் மந்தித்தோப்பு வரையிலான சாலையை விரிவுபடுத்திச் சீரமைக்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேளாண் திருத்தச் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், நடப்பாண்டு தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கழுதைகளிடம் மனு வழங்கும் போராட்டம் நடந்தது.

மந்தித்தோப்பு சாலையில் நடந்த போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் தாலுக்கா செயலாளர் பாபு தலைமை வகித்தார். மாவட்ட உதவிச் செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். தொடர்ந்து மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்திச் சீரமைக்கப் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கழுதைகளிடம் மனுக்களை வழங்கினர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில், தாலுக்கா உதவி செயலாளர் ராமகிருஷ்ணன், நகர உதவிச் செயலாளர்கள் அலாவுதீன், முனியசாமி, நகரக் குழு உறுப்பினர் ஜோசப், கிளைச் செயலாளர்கள் ரங்கநாதன், சுரேஷ்குமார், ஏஐடியுசி தலைவர் குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x