

மொழி, இனம், நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (03-02-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை - வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து அமைதிப் பேரணிக்குத் தலைமை ஏற்றுச் சென்று, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், ''தந்தை பெரியாரின் தனயன் - முத்தமிழறிஞர் கலைஞரின், தாய்த் தமிழ்நாட்டின் அண்ணன் - பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று!
அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?
மொழி - இனம் - நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம்! உறுதியேற்கிறோம் இன்று!'' என்று தெரிவித்துள்ளார்.