Published : 29 Jan 2021 02:05 PM
Last Updated : 29 Jan 2021 02:05 PM

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறைக்கு மாற்றம்; அரசு கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்: ராமதாஸ் 

சென்னை

ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதை வரவேற்கிறேன். அதே நேரம் அக்கல்லூரிகளின் கட்டணம் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரிக்கு இணையாக குறைக்கப்பட வேண்டும். அதுவே மாணவர்களுக்கு முழுமையான மனநிறைவு அளிக்கும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.13,600 மட்டுமே. ஆனால், தமிழக அரசே ஏற்று நடத்தும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ 5.44 லட்சமாகும். கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ.11,610-ஐ மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

இக்கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவம்/ முதுநிலை பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் போராடும் மாணவர்களை நிர்வாகம் வெளியேற்றியது. இதனால் போராட்டம் வலுத்தது.

இந்நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைச் சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதைக் கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் இதனை வரவேற்றுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவை அரசுக் கல்லூரிகளாகச் சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பது பாமக மற்றும் மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி.

ஆனால், இதுமட்டுமே போதுமானதல்ல. அந்தக் கல்லூரிகளின் கட்டணம் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரிக்கு இணையாக குறைக்கப்பட வேண்டும். அதுவே மாணவர்களுக்கு முழுமையான மனநிறைவு அளிக்கும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x