வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக்கூடாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக்கூடாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து
Updated on
1 min read

வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தேனி மாவட்டம் 33 சதவீதம் வனப்பகுதி நிறைந்தது. இதில் முக்கியமானது மேகமலை. இங்கு வன உயிரினங்கள் அதிகளவில் உள்ளன.

மேகமலையில் 2004 முதல் 2014 வரை 2292 ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் விவசாயத்துக்காக மேகமலையில் உள்ள மரங்களையும், வன விலங்குகளையும் அழித்து வருகின்றனர்.

மேகமலையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற 2018-ம் ஆண்டிலேயே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தற்போது வரை ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்படவில்லை. எனவே மேகமலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மேகமலை வனப்பகுதியில் 2019-ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆயிரம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேகமலை வனப்பகுதிக்கு வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மனுதாரர் தரப்பில், சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதால் வாக்குக்காக ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தால் வனப்பகுதி அழியும் சூழல் ஏற்படும். வனப்பகுதியில் வணிக ரீதியாக விவசாயம் நடைபெற அனுமதிப்பதை நிறுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in