Published : 20 Jan 2021 05:17 PM
Last Updated : 20 Jan 2021 05:17 PM

சென்னையில் மழைக்காலத்தில் வீணாகும் நீரைச் சேமிக்க நிபுணர் குழு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் 2015-ம் ஆண்டும், அதன் பின்னர் இந்த ஆண்டும் அதிக மழை பெய்தும் நிலத்தடி நீரை முறையாகச் சேமிக்காததால் வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நிபுணர் குழுவை அமைத்துப் பரிந்துரைகளை அளிக்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும், அடுத்த இரண்டு ஆண்டுகள் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதற்கு நிலத்தடி நீரை முறையாகச் சேமிக்காததே காரணம் எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், “சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் நேரடியாகக் கடலுக்குச் சென்று வீணானது. மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிலத்தடி நீர் மேலாண்மை இல்லாதததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அதிகப்படியான நீரைச் சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இந்தப் பிரச்சினையில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதற்கான நிபுணர் குழுவை நான்கு வாரத்திற்குள் அமைத்து, அடுத்த நான்கு வாரத்தில் உரிய பரிந்துரைகளை வழங்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x