

மருத்துவர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2025’ விருதுகள் வழங்கும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, பேராசிரியர் ரவி பட்னாகர், ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பி.செங்குட்டுவன், செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, நிதி செயலாளர் எஸ்.கவுரி சங்கர், ‘இந்து தமிழ் திசை’யின் விளம்பரப் பிரிவு பொது மேலாளர் வி.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில், மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும், அர்ப்பணிப்போடும் செய்துவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல், 5-வது ஆண்டாக ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2025’ விருதுகள் வழங்கும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு (ஐஎம்ஏ), ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்தின. பங்குதாரர்களாக கிராமாலயா தொண்டு நிறுவனம் மற்றும் லலிதாம்பிகை ஃபெர்டிலிட்டி சென்டர் ஆகியவை இருந்தன.
விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த 77 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கி கவுரவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ரெக்கிட் நிறுவனத்தின் தெற்கு ஆசியா, மெனார்ப் மற்றும் ஆப்பிரிக்காவின் தகவல் தொடர்பு மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை இயக்குநர் பேராசிரியர் ரவி பட்னாகர், ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
தொடர்ந்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பி.செங்குட்டுவன், செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, நிதி செயலாளர் எஸ்.கவுரி சங்கர், பேராசிரியர் ரவி பட்னாகர், கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் அலுவலர் இளங்கோவன் ஆகியோருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, மருத்துவர் கு.கணேசன் எழுதிய ‘இதயம் போற்று’ என்ற புத்தகத்தை பேராசிரியர் ரவி பட்னாகர் வெளியிட, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். முதல்கட்டமாக நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழா, அடுத்து திருச்சி மற்றும் கோவை மண்டலங்களிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ‘இந்து தமிழ் திசை’ சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் பெயரில் இந்த விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, மருத்துவர்களுக்கான விருதுகள் மற்றும் அங்கீகாரம் என்பது கரோனா பேரிடருக்கு பின்னர் தான் அதிகரிக்கத் தொடங்கியது.
கரோனா காலத்தில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து மருத்துவர்கள் ஆற்றிய மகத்தான பணியின் விளைவாக, சமூகத்தில் மருத்துவர்கள் மீதான மதிப்பு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப தமிழக அரசின் சார்பிலும், மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை வழங்கப்படாத விருதுகள், தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 158 அரசு மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம் தற்போது, 2.50 கோடி பயனாளிகளை சென்றடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2,200-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களுக்கு மருத்துவர்கள் நேரடியாகச் சென்று மருத்துவம் பார்க்கின்றனர்.
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ரூ.40 கோடி மற்றும் ரூ.36 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் நிறுவனத்துக்கு இணையாக ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில், மும்பை டாட்டா மெமோரியல் மருத்துவமனைக்கு இணையாக ரூ.324 கோடியில் மாபெரும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு வருகிறது.
அண்மையில், மத்திய அரசின் சுற்றுலாத் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவிலேயே மருத்துவ சுற்றுலாவுக்கு தமிழகத்தில் தான் அதிக அளவிலான வெளிநாட்டினர் வருகின்றனர். அதாவது, 70-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகின்றனர்.
அதற்கேற்ப, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சைக்கு ‘கேன் கிட்ஸ் கிட்ஸ் கேன்’ அமைப்புடன் ஒப்பந்தம், தற்கொலை தடுப்பு மற்றும் மனநல ஆலோசனைக்கு ‘சினேகா ஃபவுண்டேஷன்’ உடன் ஒப்பந்தம் என தமிழக அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வருகிறது.
அரசு மருத்துவர்களையும், தனியார் மருத்துவர்களையும் ஒட்டுமொத்தமாக ‘மருத்துவ நட்சத்திரம்’ என அங்கீகரித்து அவர்களுக்கான விருதுகள் வழங்கப்படுவது சாலச்சிறந்தது. இதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்து வருவதும், அதில் நானே சிறப்பு விருந்தினராக வருவதற்கான வாய்ப்பை பெற்றிருப்பதும் எனக்கு மிகப்பெரிய பெருமையளிக்கக் கூடியது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பி.செங்குட்டுவன் பேசியதாவது: ‘இந்து தமிழ் திசை’ மூலம் வழங்கப்படும் மருத்துவ நட்சத்திரம் விருது அனைவரும் எதிர்பார்க்கக் கூடிய விருதுகளில் ஒன்று. அந்த வகையில், இன்றைக்கு விருதுபெற்ற அனைத்து மருத்துவர்களுக்கும் எனது பாராட்டுகள். தமிழகத்தில் தொடர்ந்து மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ இவ்விருதுகளை வழங்குவது போற்றக்கூடியது. விருதுகளை பெற்ற மருத்துவர்கள் தங்களது பணிகளை மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துகிறேன்.
பேராசிரியர் ரவி பட்னாகர் பேசியதாவது: கரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன். சுகாதாரம் தான் நல்ல ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதால், பொது சுகாதாரத்தை வலுப்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம். நான் சென்னையில் தான் படித்து பட்டம் பெற்றேன்.
நான் எப்போதும் இந்த மாநிலத்துக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். எங்களுடன் இணைந்து பணியாற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நன்றி என்றார். இந்திய மருத்துவ சங்கத்தின் மதிப்புறு மாநில செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு பேசியதாவது: தமிழகத்தில் 50-க்கும் குறைவான படுக்கைகளை கொண்ட 7,500 தனியார் மருத்துவமனைகளும், 100-க்கும் அதிகமான படுக்கைகளை கொண்ட 355 மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.
இதை தவிர, 28 ஆயிரம் தனியார் புறநோயாளிகள் மையங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் மாதிரி மற்ற மாநிலங்களில் கிடையாது என்பதால் தமிழகத்தில் மருத்துவம் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறந்த நிலையில் இருக்கிறது என்றார்.
இந்நிகழ்வில், ‘இந்து தமிழ் திசை’ இணையதள ஆசிரியர் பாரதி தமிழன் வரவேற்புரை ஆற்றினார். முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் விழாவை தொகுத்து வழங்கினார்.