நோய்களை சரியான நேரத்தில் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு: மெரில் நிறுவன நிகழ்வில் தோனி பங்கேற்பு
சென்னை: குஜராத் மாநிலம் வாபியில் உள்ள மெரில் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி வருகைபுரிந்து, “குழந்தைப் பருவம் ஓய்வு பெறக்கூடாது” எனும் கருப்பொருளில் நெகிழ்ச்சியும், ஊக்கமும் நிறைந்த கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மெரில் என்பது ஓர் உலகளாவிய மருத்துவ சாதன நிறுவனமாகும். ரத்தநாள சிகிச்சை சாதனங்கள், எலும்பியல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
நோய்களை சரியான நேரத்தில் கண்டறிவது, நவீன மருத்துவ சிகிச்சைகளை அணுகுவது குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் மெரில் நிறுவனம் ‘சிகிச்சை அவசியம்’ (Treatment Zaroori Hai) என்ற மக்கள் சுகாதார இயக்கத்தை முன்னெடுத்துள்ளது.
இதன் ஒருபகுதியாக தோனி இந்நிகழ்வில் உரையாற்றினார். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இதய, எலும்பியல், வயது தொடர்பான பிற நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு பரிசோதனைகள், புதுமையான சிகிச்சை முறைகளை அணுகுதல் ஆகியவற்றை இந்த பிரச்சாரம் வலியுறுத்துகிறது.
நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி பேசும்போது, “உங்கள் உடல் நலனைப் பேணுவது என்பது, உங்களுக்காகவும் உங்களை நேசிப்பவர்களுக்காகவும் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல்களில் ஒன்று என்று நான் எப்போதும் உறுதியாக நம்புகிறேன்.
நம் பெற்றோரும் தாத்தா பாட்டிகளும் தங்களுக்குத் தகுதியான கவனிப்பு, அக்கறை, ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்வது நம் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு உள்ள பொறுப்பாகும்.
‘சிகிச்சை அவசியம்’ என்ற முன்னெடுப்புகள் அந்த திசையில் எடுக்கப்படும் ஒரு படியாகும். இதில் நானும் ஓர் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டார்.
