Published : 21 Jul 2020 11:54 PM
Last Updated : 21 Jul 2020 11:54 PM

நன்றி காசிராமன்

நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். அப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவர்களின் கைகளில் நமது ‘காட்பரி டெய்ரி மில்க் சாக்லேட்’ கொடுத்து அவர்களுக்கு நன்றியை செலுத்துவோம். அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...

பூம்புகாருக்கு அருகே இருக்கும் கீழமூவர்கரை மீனவ கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் காசிராமனைப் பார்த்ததும் வலை பிண்ணிக் கொண்டிருக்கும் ஆண்களும், கருவாடு காய வைத்துக் கொண்டிருக்கும் பெண்களும் பார்த்துக்கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எழுந்து நின்று கும்பிடுகிறார்கள்.

அவர் ஒரு வீட்டின் முன் நின்று ”பாக்யா, குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்று கேட்டதும், ’என்ன சாமி இப்படி கேட்டுட்டீங்க.
உப்பங்கரையில வாடுற நாங்க இன்னிக்கு நல்ல தண்ணி குடிக்கிறோம்னா அது நீங்க காட்டுற கரிசனம்தான காரணம். காலைல கூட வந்து அஞ்சு கேனு தண்ணி புடிச்சுகிட்டு தான் வந்தேன். என்று சொல்லிவிட்டு உள்ளே போய் செம்பு நிறைய தண்ணீரை எடுத்துவந்து காசிராமனிடம் நீட்டுகிறார் பாக்யா. கீழமூவர்கரை போல மங்கைமடம், திருவெண்காடு, பெருந்தோட்டம், மேலையூர், பூம்புகார் உட்பட பத்து கிராம மக்களுக்கு அவர் தாகம் தீர்க்கும் தண்ணிசாமி.

எப்போது பார்த்தாலும் திருவெண்காடு கீழவீதியில் உள்ள காசிராமனின் வீட்டின் முன்னால் சில ஆட்டோக்கள், டெம்போக்கள், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் என்று ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. அதில் வரும் மனிதர்கள் குடங்கள், தண்ணீர் கேன்கள், பாத்திரங்களில் தண்ணீர் பிடித்துக்கொண்டு போகிறார்கள். காசிராமன் பல லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைத்து தன் வீட்டு நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்குகிறார்.

’’வீட்டுக்கு பக்கத்திலதான் கவர்மெண்டு ஆஸ்பத்திரி இருக்கு. தினமும் ஐநூறு, அறுநூறு பேர் அங்க வருவாங்க. அவங்க தாகத்துக்கு தண்ணி குடிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. காசு கொடுத்து வாங்கிக்குடிக்க அவங்களுக்கு வசதி கிடையாது. அவங்களுக்காக வீட்டுக்கு வெளில பெரிய பாணையில தண்ணி வைச்சேன். சீக்கிரமே பாணை காலியாடும். திரும்ப திரும்ப தண்ணி நிரப்புனேன். அப்புறம் நிறைய பாணை வைச்சோம்.


அதுவும் பத்தல. அப்புறம் தான் ஐநூறு லிட்டர் சுத்திகரிப்பு மிசின் வைச்சோம். இப்ப அது இரண்டாயிரம் லிட்டர் மிசினா மாறியிருக்கு. இப்ப யாரு வேணுமின்னாலும் எத்தனை லிட்டர் வேணுமின்னாலும் புடிச்சுக்கலாம். கணக்கு இல்ல. மக்கள் தாகம் தீர்க்கிற அளவுக்கு தண்ணீரை கொடுக்கனும் இல்லையா? என்கிறார் காசிராமன்.

இரண்டு குடங்களில் தண்ணீரை பிடித்துக்கொண்டு கிளம்பும் மடத்துக்குப்பத்தைச் சேர்ந்த சந்தனவேல், ‘‘தாகம் தீர்க்க தண்ணீயும் கொடுத்து ஆரோக்கியத்துக்கு மூலிகை குடிநீரும் தரீங்க, இதுக்கு நாங்க எந்த கைமாறும் செய்ய முடியாது. ஆனா நீங்க நோய்நொடி இல்லாம ரொம்ப காலத்துக்கு நல்லாயிருக்கனும் சாமி” என்று கையெடுத்து கும்பிட்டு வாழ்த்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x