

சென்னை: வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் வாசிப்புத் திருவிழா எ
னும் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முன்னெடுத்துள்ளது. வாசகர்களின் பங்கேற்புடன் இணைந்து கொண்டாடப்படும் இந்நிகழ்வு மார்ச் 2-ம் தேதி சென்னை, அடையாறு, காந்திநகர் (கோட்டூர்புரம் ரயில்வே நிலையம் பின்புறம்) கேனால் பேங்க் சாலையிலுள்ள பேட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை வர்த்தமானன் பதிப்பகமும், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்து வழங்குகின்றன.
ஒவ்வொரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும் சுய சிந்தனைக்கும் வாசிப்பு மிகவும் அவசியம். நம்முடைய வரலாற்றையும் பண்பாட்டையும் வாசிப்பே நமக்கு வெளிச்சமிட்டு துலங்கச் செய்கிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பம் இன்றைக்கு நம் உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
ஆனாலும் காட்சி ஊடகங்கள் நமக்கு ஒற்றைத்தன்மையான கருத்துகளையே அளிக்கின்றன. சமூக ஊடகங்களின் வழியே நொடிக்கொரு செய்தி நம் பார்வைக்கு வந்தாலும், செய்தியின் உண்மைத்தன்மையை அச்சு ஊடகங்களின் வழியாக மட்டுமே நம்மால் உறுதிசெய்ய முடிகிறது.
நாளிதழ் வாசிப்பு, புத்தக வாசிப்பு என வாசிப்பை சுவாசிக்கும் சமூகம்தான் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்க முடியும். புத்தக வாசிப்பு என்பது தனிப்பட்ட முறையிலும் சமூகத்துக்கும் நன்மை அளிக்கக்கூடிய செயல். வாசிப்பின் வழி அவரவர் கற்பனைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப பன்முகமான கருத்துகள் உருவாகும்.
வாசகர்களுடன் இணைந்து வாசிப்பின் சிறப்பைக் கொண்டாடும் இவ்விழாவில் தமிழக அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும் எழுத்தாளருமான வெ.இறையன்பு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்ற இருக்கிறார்கள். தங்களது வாசிப்பு அனுபவத்தை வாசகர்களும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.