Published : 30 Oct 2023 07:15 PM
Last Updated : 30 Oct 2023 07:15 PM

பக்கவாத நோய் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் 


டாக்டர் கார்த்திகேயன் மு அ, என்டோவாஸ்குலர் & இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட்
தரண் மருத்துவமனை, சேலம், தமிழ்நாடு


பக்கவாத தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29–ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதையும், அது வராமல் தடுப்பதற்கும், அதற்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதும் ஆகும். பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்கு ரத்தம் செல்லாமல் இருப்பதால் ஏற்படும் ஒருவித நோய் ஆகும். உலக அளவில் இறப்பு மற்றும் இயலாமைக்கு 3வது காரணமாக பக்கவாத நோய் உள்ளது. பக்கவாத நோயில் இருந்து தப்பிப் பிழைத்த மூன்றில் ஒரு பங்கு பேர் நிரந்தர இயலாமைக்கு ஆளாகின்றனர்.

இந்தியாவில் மிகுந்த கவலை அளிக்கும் பக்கவாதம்

உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ளதைப் போலவே, இந்தியாவிலும் பக்கவாத நோய் குறிப்பிடத்தக்க சுகாதார கவலையாக உள்ளது. இது எல்லா வயதினரையும் பாதிப்பதோடு, வயதுக்கு ஏற்ப ஆபத்தும் அதிக அளவில் உள்ளது.6 சமீப காலமாக வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வயதானவர்களின் அதிக மக்கள் தொகை காரணமாக இந்த நோய் அதிகரித்து காணப்படுகிறது.6,7 இந்தியாவில் அதிக மக்கள் தொகை காரணமாக தொற்று நோய் அபாயத்துடன் பக்கவாத பாதிப்பும் அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 18 லட்சம் பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் வாழ்நாளில் நான்கில் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, புகைபிடிப்பதைத் தவிர்த்து, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம். பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.

பக்கவாதம்(ஸ்ட்ரோக்) மற்றும் அதன் வகைகள்

பக்கவாதத்தில் இஸ்கிமிக் மற்றும் ஹெமோர்ராஜிக் என்னும் இரண்டு வகை உள்ளது.

இஸ்கிமிக் பக்கவாதம் என்பது மூளையில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் ஓட்டம் இல்லாமல் உறைவதால் ஏற்படுகிறது. மற்றொரு ஹெமோர்ராஜிக் பக்கவாதம் என்பது மூளையில் உள்ள ரத்த நாளங்களில் கசிவு காரணமாக உண்டாகிறது. பக்கவாத நோயைப் பொறுத்தவரை 80 முதல் 85 சதவீதம் பேருக்கு இஸ்கிமிக் வகை பக்கவாதமே ஏற்கிறது.3 பெரிய ரத்த நாளங்கள் அல்லது சிறிய ரத்த நாளங்கள் அடைப்பு காரணமாக பக்கவாதம் வருகிறது. இஸ்கிமிக் பக்கவாதத்தைப் பொறுத்தவரை 3–ல் ஒருவருக்கு மூளையில் உள்ள பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு (LVO) காரணமாக ஏற்படுகிறது. சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக ஏற்படும் பக்கவாதத்தைவிட பெரிய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பால் வரும் பக்கவாதம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த பக்கவாதம் பொதுவாக இதயத்தில் இருந்து ஒரு ரத்த உறைவு இடம் பெயர்வதால் மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது அல்லது 'கொழுப்பு' குவிப்பால் மூளையின் ரத்த நாளத்தில் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. மூளையின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பிறகு ஒரு நொடிக்கு சுமார் 30000 நியூரான்கள் இறக்கின்றன. பக்கவாதம் போன்ற நோய் அறிகுறி தென்பட்டவுடன் நோயாளிகள் உடனடியாக அருகில் உள்ள "ஸ்ட்ரோக் ரெடி சென்டருக்கு" முடிந்தவரை வேகமாக செல்வது நல்லது.

பக்கவததின் அறிகுறிகளை BE FAST என எளிதில் நினைவில் கொள்ள வேண்டும்.

Balance: உடற்சமநிலை இழத்தல்
Eyes : ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழத்தல்
Face : முகம் ஒரு புறமாக இழுத்து கொள்ளுதல்
Arm : ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயல்பட இயலாதது
Speech : பேச்சில் குளறுதல்
Time : சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுதல்

சிகிச்சை முறைகள்:

மூளையில் ரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தை முடிந்தவரை விரைவாக மறுசீரமைப்பது என்பது மூளையைக் காப்பாற்றுவதற்கும் பக்கவாதத்திற்கு பிந்தைய இயலாமையை குறைப்பதற்கும் மிகச் சிறந்த வழியாகும். இது IV த்ரோம்போலிசிஸ் அல்லது மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி மூலம் செய்யப்படுகிறது.

IV-த்ரோம்போலிசிஸ்:

பக்கவாதம் ஏற்பட்டதற்கு மூளையில் ரத்தப்போக்கு காரணமா அல்லது ரத்தக் குழாயின் அடைப்பு காரணமா என்பதைக் கண்டறிய அவர்களுக்கு CT அல்லது MRI ஸ்கேன் செய்யப்படும். இது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இந்த இரண்டும் வெவ்வேறு வகையானதாகும். எனவே அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதற்கான முதல் நிலையாக இந்த பரிசோதனை செய்யப்பட வேண்டும். மூளையின் ரத்தக் குழாயின் அடைப்பு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டால், அறிகுறிகள் தோன்றிய 4 முதல் 5 மணி நேரத்திற்குள் ரத்த உறைவைக் கரைக்கும் மருந்தை (க்ளாட் பஸ்டர்) கொடுக்கலாம். ரத்த உறைதல் மருந்துகளின் பயன்பாடு த்ரோம்போலிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் இந்த சிகிச்சை முறை 20 சதவீதம் நோயாளிகளுக்கு மட்டுமே திறம்பட செயல்படுகிறது. அறிகுறி தோன்றிய 4 முதல் 5 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தால் அல்லது மேற்கூறிய த்ரோம்போலிசிஸ் முறைக்கு முரணாக ஒவ்வாமை இருந்தால் மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி சிறப்பான சிகிச்சை முறையாக அமைகிறது.

மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி (MT):

பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிப்பதில் மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி சிகிச்சை முறை என்பது தற்போதைய காலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஆகும். MT என்பது நுண்துளையீட்டு சிகிச்சை முறையாகும், இதில் பெரிய ரத்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தும் ரத்த கட்டிகள் கருவிகளைப் பயன்படுத்தி அகற்றப்பட்டு ரத்த ஓட்டம் மீட்டெடுக்கப்படுகிறது, ரத்த ஓட்டம் இல்லாமல் இறக்கும் அபாயத்தில் இருந்த மூளை திசுக்களைக் இது காப்பாற்றுகிறது.

MT சிகிச்சை முறை:

• தொடையில் (அல்லது மணிக்கட்டில்) உள்ள ரத்தக் குழாய் வழியாக ஒரு வடிகுழாயானது முன்னேறி மூளையின் ரத்தக் குழாயில் உள்ள ரத்தக் கட்டியை அடையும், இவை அனைத்தும் சிறப்பு எக்ஸ்ரே இமேஜிங் (Cathlab) வழிகாட்டுதலைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

• ஸ்டென்ட் ரிட்ரீவர் (ரத்த நாள கட்டியை அகற்றக்கூடிய ஒரு மெல்லிய இயந்திர கருவி) மற்றும்/அல்லது ஆஸ்பிரேஷன் வடிகுழாய் ரத்தம் உறைந்த இடத்தில் அடைப்பை நீக்கி ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

சரியான நேரத்தில் மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டால் ரத்த நாளத்தில் உள்ள ரத்தக் கட்டிகளை விரைவாகவும் திறம்படவும் அகற்றலாம். இந்த சிகிச்சை முறை, நோயாளிகள் விரைந்து குணமடையவும், வழக்கமான உடல் செயல்பாடுகளை மீட்டெடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.


பொறுப்புத் துறப்பு:

மெட்ரானிக் மூலம் பொது நலன் கருதி வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட கருத்துகள் டாக்டர் கார்த்திகேயன் மு அ. தனிப்பட்ட கருத்துகள் ஆகும். இவை பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளன மற்றும் இவை மருத்துவ ஆலோசனை அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x