Last Updated : 18 Jul, 2014 12:33 PM

 

Published : 18 Jul 2014 12:33 PM
Last Updated : 18 Jul 2014 12:33 PM

சரக்கு வாகனம் வாங்க பழங்குடியினருக்கு கடனுதவி

தாட்கோ திட்டங்கள் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.சக்திவேல்.

#கடனுதவிகள் வழங்குவதற்கு பயனாளிகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்?

பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 - 55. அந்தந்த மாவட்ட தாட்கோ மேலாளரை தலைவராகக் கொண்டு, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சேவைப்பகுதி வங்கியாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு வட்டாரத்திலும் (ஊராட்சி ஒன்றியம்) விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள். திட்டம் குறித்த விவரம், செயல் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்படுபவரின் விண்ணப்பம் தாட்கோ மூலமாக வங்கிக்கு அனுப்பப்படும்.

#வங்கிக் கடனில் எவ்வளவு மானியம் கிடைக்கும்?

தொழில் முனைவோர் திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம் 50 சதவீதம் அல்லது ரூ. 3.75 லட்சம் - இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும். மானியத் தொகை, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

#தொழில்முனைவோர் திட்டம் நீங்கலாக வேறு திட்டங்கள் உள்ளதா?

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் (Self Employment Programme for Youth - SEPY) என்ற திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் பழங்குடியின இளைஞர்கள் வாகனம் வாங்க முடியும். மலைப் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு இடையூறு இல்லாமல் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க தற்போது தாட்கோ நிதியுதவியுடன் 100 நகரும் நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி பழங்குடியினருக்கான செயல் திட்டத்தில் 100 சரக்கு வாகனம் வாங்க கடனுதவி வழங்கப்படும்.

#இந்த திட்டத்தில் வாகனம் வாங்க என்ன செய்ய வேண்டும்?

வாகனக் கடன் கேட்டு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம், வாடகை வாகனங்களை இயக்குவதற்கான பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும். முன்அனுபவம் அவசியம். இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் கிடைக்கும். அவற்றை பூர்த்தி செய்து மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்ட குழுவினர் விண்ணப்பதாரரை தேர்வு செய்து வங்கி கடனுதவி பெற பரிந்துரை செய்வார்கள். அந்த குழுவில் வட்டாரப் போக்குவரத்து துறையினர் இடம் பெறுவர். அவர்கள் மலைப்பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் எந்த வாகனம் வாங்க வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்துவர்.

#இதில் மானியம் உண்டா?

பயணியர் வாகனமாக இருந்தால் (ஜீப் உள்ளிட்டவை) திட்ட மதிப்பீடு ரூ.8 லட்சம்வரை இருக்கவேண்டும். அதற்கு மானியமாக 50 சதவீதத்துக்கு மிகாமல் (ரூ.4 லட்சம் வரை) வழங்கப்படும். பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனமாக இருந்தால் அவற்றின் திட்ட மதிப்பீடு ரூ.11 லட்சம் வரை இருக்கவேண்டும். மானியம் ரூ.5.50 லட்சம் வரை வழங்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x