Published : 09 Sep 2017 09:06 AM
Last Updated : 09 Sep 2017 09:06 AM

பாரதேந்து ஹரிச்சந்திரா 10

இந்தி இலக்கியம், இந்தி நாடகத் துறையின் தந்தை எனப் போற்றப்படும் பாரதேந்து ஹரிச்சந்திராவின் (Bharatendu Harish chandra) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பனாரசில் பிறந்தார் (1850). சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர், உறவினர்களிடம் வளர்ந்தார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். நிறைய வாசித்தார்.

* 15 வயதிலேயே நாடகம் எழுத ஆரம்பித்தார். வங்க மொழியில் இருந்த ‘வித்யாசுந்தர்’ என்ற நாடகத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். சமூக, வரலாறு மற்றும் புராண நாடகங்கள், நாவல்களும் எழுதினார்.

* இந்தி இலக்கியத்தை வளர்த்தெடுப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். மொழி, இலக்கியத்தில் இவரது இயல்பான திறனும் ஆளுமையும் இந்த இலக்கை அடைய உதவின.

* கடிபோலி மொழியில் நிறைய நாடகங்கள் எழுதினார். ரஸா என்ற புனைப்பெயரில் எழுதினார். இவரது நண்பர்களும் பிரபல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களாகவே இருந்தனர். பாலகிருஷ்ண பட், பிரதாப நாராயணன் மிஸ்ரா ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

* அந்தக் காலகட்டத்தில் மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து வந்தனர். அந்தச் சமயத்தில் எழுதத் தொடங்கிய இவரது படைப்புகளால் மக்கள் வசீகரிக்கப்பட்டனர்.

* கவி வசன், சுதா ஆகிய இதழ்களை நடத்திவந்தார். ஹரிச்சந்திரா பத்திரிகா, பால் விவோதினி ஆகிய இதழ்களில் சுதேசி பொருள்களைப் பயன்படுத்துமாறு கட்டுரைகளை எழுதி, இந்தி இலக்கிய இதழியல் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார். இந்தி, உருது, சமஸ்கிருதம், வங்கம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். வ்ரஜபாஷாவில் இவரது மொழி ஆளுமை அசாதாரண மானதாகப் போற்றப்பட்டது. ‘சப்த சங்ரஹ்’, ‘பிரேம் மாதுரி’ ஆகியவை இவரது தலைசிறந்த படைப்புகளாகப் புகழ்பெற்றன.

* 72 நூல்களை எழுதியுள்ளார். சவுபாயி, சப்பாய, ரோலா, ஸோரடா, குண்டலியா, சவையா உள்ளிட்ட அனைத்துப் பா வகைகளும் இவரது காவியங்களில் இடம்பெற்றன. இவரது நடையில் நகைச்சுவை இழையோடும். கவிதைகள், உரைநடை நூல்கள், நாடகங்கள், பயண நூல்கள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதியுள்ளார்.

* ‘வைதிக் ஹின்ஸா ஹின்ஸா ந பவதி’, ‘பாரத் துர்தஷா’, ‘சத்ய ஹரிச்சந்திரா’, ‘அந்தேர் நகரி’ உள்ளிட்ட நாடகங்கள், ‘பக்த சர்வக்ஞ’, ‘பிரேம் மாலிகா’, ‘பிரேம் தரங்’, ‘பிரேம் பிகல்ப்’ உள்ளிட்ட காவியங்கள், ‘பாரதேந்து கிரந்தாவளி’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூல், ‘முத்ர ராக்ஷஸா’, ‘ரத்னாவளி’, ‘துர்லப் பந்து’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட இவரது படைப்புகள் இந்தி இலக்கியத்தை வளம்பெறச் செய்தன.

* ‘நவீன இந்தி இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்பட்டார். குறைந்த வாழ்நாட்களையேக் கொண்டிருந்தாலும் அதற்குள்ளாகவே இந்தி இலக்கிய உலகில் ஆழமான முத்திரையைப் பதித்தார். இவரது காலகட்டம், இந்தி இலக்கியத்தில் ‘பாரதேந்து யுகம்’ எனக் குறிப்பிடப்படுகிறது.

* காசி நகர அறிஞர்கள் 1880-ல் இவருக்கு ‘பாரதேந்து’ பட்டம் வழங்கினர். இந்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இலக்கியத்தில் ‘பாரதேந்து ஹரிச்சந்திர’ விருதுகளை வழங்கி வருகிறது. நவீன இந்தியாவின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் கவிஞர், பத்திரிகையாளர், இந்தி உரைநடையின் முன்னோடி எனப் போற்றப்பட்டவருமான பாரதேந்து ஹரிச் சந்திரா 1885-ம் ஆண்டு, தமது 35-வது வயதில் மறைந்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x